Wednesday, April 22, 2015

நீங்கள் வாங்கும் தங்கம், சுத்தத் தங்கமா? ஓர் எச்சரிக்கை கைடு

''ஆயிரங்கள், லட்சங்கள் என்று கொடுத்து தங்க நகைகளை வாங்கிக் குவிக்கும் மக்களே, நீங்கள் கொடுக்கும் பணத்துக் கேற்ற எடை மற்றும் தரத்தில் அந்தத் தங்கம் இருக்கிறதா என்று ஒரு நாளாவது யோசித் திருக்கிறீர்களா? நீங்கள் வாங்கும் தங்க நகை களில் பெரும்பாலானவை கலப்பட தங்கத்தில் தயாரானவையே!"

- இப்படிச் சொல்லி நம்மை திடுக்கிட வைக்கிறார், `கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பின் முன்னாள் தலைவர் தேசிகன்.

ஆண்டு முழுக்கவே தங்கம் வாங்கிக் கொண்டிருந்தாலும், அதற்கும் ஒரு சீஸனாக, அட்சய திருதியை என்பது சில பல ஆண்டு களாக இங்கே பிரபலமாக இருக்கிறது. இந்த ஆண்டுக்கான அட்சய திருதியைக்கு (ஏப்ரல் 21) சில தினங்களுக்கு முன் சென்னை பத்திரிகையாளர் சங்க அரங்கில் தங்கம் பற்றி தேசிகன் இப்படி பகிர்ந்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சியும், விழிப்பு உணர்வும் தருகின்றன.

கேடிஎம் ஜாக்கிரதை!

''உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 880 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. காரணம், மற்ற நாடுகளைக் காட்டிலும் நம் நாட்டில் ஏமாளிகள் அதிகம் என்பது ஒன்று மட்டுமே! அந்தளவுக்கு நமக்கு தங்கம் தவிர்க்க முடியாத பொருளாகிவிட்டது. கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், தங்கம் பற்றிய பல திடுக்கிடும் உண்மைகள் கண்டறியப்பட்டன.

தென்இந்தியாவில்தான் அதிகமானோர் தங்கம் வாங்குகிறார்கள். மக்கள் நகைக்கடைகளால் அதிகம் ஏமாற்றப்படுவதும் இங்குதான். 'ஹால்மார்க்' முத்திரை என்பது தங்கத்தின் தரத்தை உறுதிபடுத்தும் முத்திரை. இந்த முத்திரையுள்ள தங்கத்தை வாங்கும்போதும்கூட பல கடைகளில ஏமாற்று வேலை நடப்பதுதான் வேதனை! உச்சபட்சக் கொடுமையாக, உட லுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய, கேன்சர் ஏற்படுத்தக்கூடிய வேதிப் பொருட்கள், தங்கத்துடன் கலப்படப் பொருளாகச் சேர்க்கப்படுகின்றன. இது நிரூபிக்கப்பட்ட உண்மை. உதாரணமாக, கேடிஎம் எனும் வேதிப்பொருளை தங்க நகை செய்வதற்கு பயன்படுத்துகிறார்கள். இது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், பெரும்பாலும் தங்க ஆபரணங்களில் இது சேர்க்கப்படுகிறது.

பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கம் குறித்த விழிப்பு உணர்வைப் பெறவேண்டியது முக்கியம். அதற்காகத்தான் இந்த ஆய்வை மேற்கொண்டோம். அரசிடம், தங்க வணிகத்தில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவல்ல மூன்று கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கவிருக்கிறோம். தங்கத்தின் எடையைக் குறைப்பதற்காக சேர்க்கப்படும் வொயிட் மெட்டல் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்; ஹால்மார்க் முத்திரையை சரிவர வழங்குவதோடு அதை சரியாக பின்பற்றாதவர்களுக்கு உடனுக்குடன் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்; அரசாங்கமே தங்க உருக்காலைகள் தொடங்கி சுத்தமான தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும்'' என்ற தேசிகன்,

``மும்பை போன்ற இடங்களில் தங்க விற்பனையில் பல கட்டுப்பாடுகள் இருப்பதுபோல், தமிழகத்திலும் வந்தால்தான், தங்கம் விஷயத்தில் மக்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க முடியும்!'' என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

ஹால் மார்க் முத்திரையிலும் மோசடி!

தங்கம் குறித்து தொடர்ந்து பேசிய தேசிகன், ``இப்போதெல்லாம் ஹால்மார்க் முத்திரை கொண்ட தங்கம் அல்லது வெள்ளி நகைகள் தரமானவை என்று கூறப்படுகிறது.  வாடிக்கையாளர்கள், தரமற்றவற்றை வாங்காமல் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட முத்திரை (BIS) என்பதால், ஹால்மார்க் முத்திரை நம்பகமாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்த முத்திரையானது நாம் வாங்கும் ஒவ்வொரு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணத்துக்கும்  சரிவர வாங்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது அத்தனை சுலபமான காரியமல்ல. இதைப் பயன்படுத்திக் கொண்டும் மக்களை ஏமாற்றுகின்றனர், நகை வியாபாரிகள் பலரும்.

இந்தியாவில் ஹால்மார்க் முத்திரை வழங்கக்கூடிய சென்டர்கள் 324 இருக்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு சென்டரில் 500 ஆபரணங்களை மட்டுமே பரிசோதிக்க முடியும். ஆக, 324 சென்டர்களிலும் ஒரு நாளில் 1,62,000 ஆபரணங்களை மட்டுமே பரிசோதிக்க முடியும். ஒரு நகையின் எடை சராசரியாக 10 கிராம் என்று வைத்துக்கொண்டால், ஒரு நாளைக்கு 1.62 டன் நகைகள் வரை மட்டுமே ஹால்மார்க் முத்திரை கொடுக்கமுடியும். ஓர் ஆண்டுக்கு 591 டன் அளவு நகைகளுக்கு மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும். ஆனால், இந்தியாவின் தங்க நகை இறக்குமதி அளவு ஆண்டுக்கு, 880 டன். இந்நிலையில், ஹால் மார்க் முத்திரை என்பது நூறு சதவிகிதம் எப்படி சாத்தியம் என்று யோசியுங்கள்!

தங்கத்தில் தொடரும் கலப்படம்!

22 காரட் (916) தங்கமாக இருந்தாலும், 8 கிராம் (8,000 மில்லி கிராம்) ஆபரணத்தில், 7,328 மில்லி கிராம்தான் தூய்மையான தங்கம் இருக்கிறது. மீதம் 672 மில்லி கிராம் செப்பு அல்லது வேறு உலோகங்கள் கலக்கப்படுகின்றன. இது தங்கத்தை ஆபரணங்களாக மாற்றுவதற்காக செய்யப்படுவது. ஹால்மார்க் முத்திரை பெறாத மற்றும் மக்களை ஏமாற்றுவதற்கென்றே இருக்கும் நகைக்கடைகளில் விற்கப்படும் நகைகளில் இந்தக் கலப்படத்தின் அளவு இன்னும் அதிகரிக்கும். இத்தகைய கலப்பட தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர்களும், `916 தங்கம்' எனப்படும் தங்கத்துக்கு தரும் பணத்தையே கொடுக்கிறார்கள். ஆண்டுதோறும் இப்படி சுமார் 480 டன் தங்கம் வரை இங்கே ஏமாற்றி விற்கப் படுகிறது.

மோசடிகள் பலவிதம்!

இந்தியாவில் தங்கத்தை, ஆபரணங்களாக மாற்றும்போது நகைக்கடைக்காரர், தரகர், இடைத்தரகர் என ஒவ்வொரு கட்டத்திலும் தங்கம் சுரண்டப்படுகிறது. இதன் மூலமாக மட்டுமே ஒன்பது கோடி ரூபாய் வரை இவர்கள் வருமானம் பார்க்கிறார்கள். தங்க நகை சேதாரம் மூலமாகவும் பெரும் கொள்ளை நடக்கிறது. இறக்குமதியாகும் 880 டன் தங்கம், ஆபரணங்களாக மாற்றப்படும்போது மொத்தம் 2.6 டன் வரை சேதாரம் இருக்கலாம். ஆனால், மக்களிடம் விற்கும்போது, ஒவ்வொரு நகைக்கும் அதிகமான தங்கம் சேதாரமாகக் கணக்கிடப்படுகிறது. இதுதவிர, நகைகள் வாங்கும்போது 6.78 கிராம் எடை இருந்தால், ரவுண்டாக 7 கிராம் என்று சொல்வார்கள். நகை எடை பார்க்கும் மெஷினில் ஸ்பெஷல் கீ எனப்படும் சாம்பிள் பட்டனை அழுத்தியவுடன் எடையை ரவுண்டாக மாற்றிவிடும். இப்படி பெரும்பாலான கடைகளில் மில்லி கிராம் தங்க அளவில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட, சிறுதுளி பெருவெள்ளமாக கடையின் முதலாளி களுக்கு தங்க மழை பொழிகிறது!

தங்கத்தில் என்னவெல்லாம் கலக்கப்படுகிறது?

ஹால்மார்க் முத்திரை இல்லாத நகைகளில் 31 பர்சன்ட் அளவுக்கு அலாய் எனப்படும் வொயிட் மெட்டல் கலக்கப்பட்டிருக்கும். நீங்கள் 8 கிராம் நகை வாங்குகிறீர்கள் என்றால், அதில் கிட்டத்தட்ட 2.5 கிராம் அளவுக்கு இந்த வொயிட் மெட்டல் கலந்திருக்கும். மீதி 5.5 கிராம் மட்டுமே தங்கம். உதாரணத் துக்கு, நீங்கள் 8 கிராம் நகையை 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகிறீர்கள். ஆனால், இதிலிருக்கும் 5.5 கிராம் தங்கத்தின் உண்மை யான மதிப்பு 13,750 ரூபாய். மீதி 6,250 ரூபாய் உங்களிடம் சுரண்டப்பட்டு, அதற்குப் பதிலாக, 2.5 கிராமுக்கு 250 ரூபாய் மதிப்புள்ள வொயிட் மெட்டல் கலக்கப்படுகிறது. கடைக்காரர்கள் பெறும் லாபத்தையும், உங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தையும் நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்'' என்று சொன்னார் தேசிகன்.

தங்கங்களே... உஷார்!


``ஏமாற்று வேலை... இல்லவே இல்லை!''

'கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா' அமைப்பு, தங்கம் குறித்து வெளியிட்ட ஆய்வு முடிவுகள் குறித்து கோவையில் உள்ள 'தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகள் சம்மேளன' தலைவர் ரகுநாத்திடம் கேட்டோம். ''ஹால்மார்க் முத்திரை சரிவர குத்தப்படுவதில்லை என்றால், அதை மத்திய அரசிடம்தான் புகாராக சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, இன்றைக்கு 324 ஹால்மார்க் முத்திரை மையங்கள் இந்தியாவில் இருக்கின்றன. சராசரியாக 5 கிராம் தங்க ஆபரணம் என்று எடுத்துக்கொண்டால், சர்வ சாதாரணமாக ஆண்டுக்கு 1,000 டன் தங்கத்துக்கும் அதிகமாகவே ஹால்மார்க் முத்திரை வாங்கமுடியும்.

மட்டமான தங்கம், 40 சதவிகிதம் கலப்படம் என்பதெல்லாம் அவ்வளவு சுலபமாக செய்யக்கூடிய காரியமல்ல. 95-ம் ஆண்டு முதல் நாங்கள் மக்களுக்கு பலவித விழிப்பு உணர்வுகளை கொடுத்துவருகிறோம். அதனால் மக்களும் வெகு ஜாக்கிரதையாகவே நகைகளை வாங்கிச் செல்கிறார்கள். உண்மையில் நகை வியாபாரத்தில் சொல்லிக்கொள்ளும்படி வருமானம் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைக்கு நகை வாங்குபவர்கள் யாரும் அரசாங்கத்தின் ஹால்மார்க் முத்திரை இல்லாமலும், நாங்கள் கொடுக்கும் பில் இல்லாமலும் வாங்கிச் செல்வதில்லை. அப்படி இருக்கும்போது மக்களை எப்படி ஏமாற்ற முடியும்.

நுகர்வோர் அமைப்பினர் செய்த ஆய்வில் எந்தக் கடையில் வாங்கிய நகையை வைத்து சோதனை செய்தார்களோ தெரியாது. உண்மையில் இதைப் பார்க்கும்போது நகை குறித்த, ஹால்மார்க் குறித்த அடிப்படை தெரியாதவர்கள் சொல்லும் புகார் போன்றுதான் உள்ளது. சரியான முறையில் ஆதாரத்தோடு சந்தேகம் தெரிவித்தாலோ, புகார் அளித்தாலோ தக்க பதிலளிக்கலாம்.

உண்மையில் 99 சதவிகிதம் சரியாக நடக்கக்கூடிய வியாபாரம், தங்க நகை வியாபாரம்தான். அதிலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் போன்ற இடங்களில் தங்கம் விஷயத்தில் மக்களை ஏமாற்றுவது சாத்தியமற்றது. வட இந்தியாவில், மும்பையில் சில இடங்களில் குறைந்த விலையில் தங்கம் கிடைக்கிறது என்று வாங்கி, கலப்படத்தால் மக்கள் ஏமாறுகிறார்கள். அதுபோன்று தமிழகத்தில் எங்கும் நடக்க வாய்ப்பில்லை'' என்று சொன்னார் ரகுநாத்.


கோல்டு இ.டி.எஃப்!

கல்யாணம், காட்சி என்று தங்கத்தை நகையாக வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், தரமான கடைகளில், தரமான ஹால்மார்க் முத்திரையை உறுதிபடுத்திக்கொண்டு வாங்கலாம். ஆனால், முதலீடு என்கிற வகையில் வாங்கிச் சேமிப்பவர்கள் இப்படி நகைகளை வாங்கத் தேவையே இல்லை. பேப்பர் கோல்டு என்கிற வகையில் முதலீடு செய்யலாம்.

இதைப் பற்றி பேசும் சென்னையைச் சேர்ந்த முதலீட்டு ஆலோசகர் வி.நாகப்பன், ''தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட 'எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டு', கோல்டு இ.டி.எஃப் என்றழைக்கப்படுகிறது. இதை பேப்பர் கோல்டு என்றும் அழைப்பார்கள். இது இப்போது மிகப்பிரபலமாக வளர்ந்துவரும் பாதுகாப்பான தங்கம் சேமிப்பு முறை. பதிவு பெற்ற தரகர் மூலமாக, யார் வேண்டுமானாலும் இதற்கான டிரேடிங் அக்கவுன்ட் தொடங்கி, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்தலாம். அன்றைய தினம் நீங்கள் செலுத்தும் பணத்துக்கு ஏற்ப தங்கம் எவ்வளவு விலை போகிறதோ, அதற்கு ஏற்ப தங்கமாக உங்கள் கணக்கில் சேர்க்கப்படும். எப்போது வேண்டுமானாலும் இதை நீங்கள் திரும்ப எடுத்துக் கொள்ளலாம். அன்றைய தங்க மார்க்கெட் விலைக்கு ஏற்ப உங்களுக்கு பணம் கிடைக்கும். இதை வைத்து நீங்கள் நகை வாங்கிக்கொள்ளலாம். இதன் முக்கிய சிறப்பு, செய்கூலி, சேதாரம்... எதுவும் கிடையாது. தங்கம் கொள்ளை போய்விடுமோ என்கிற பயமும் கிடையாது. நீண்ட நாள் தங்க சேமிப்புக்கு இதுவே சிறந்த முறை'' என்று பரிந்துரை செய்தார்.


கல் நகை... உஷார்!

மிக முக்கியமாக.. நகைக்கு பில் போடும்போது ஆபரணத்தில் எவ்வளவு தங்கம் இருக்கிறது, பிற உலோகங்கள் எவ்வளவு சேர்க்கப்பட்டுள்ளன போன்றவற்றை பதிவிடவேண்டும். கல் ஒட்டுவது போன்ற வற்றுக்கு தனியாகவும், தங்கத்துக்கு தனியாகவும் கட்டணம் வாங்க வேண்டும். பெரும்பாலும் இன்றைக்கு அப்படி செய்வது கிடையாது. மாறாக, கல்லுடன் சேர்த்து 20 கிராம் எடை என்றால், 20 கிராம் தங்கம் என்று சொல்லி மொத்தமாக கட்டணம் வசூலிக்கிறார்கள். உண்மையில் அதில் 15 கிராம்தான் தங்கம் இருக்கும். மீதமுள்ள 5 கிராம் கல் (வெகு சொற்ப மதிப்புள்ளது) இருக்கும்.


எங்கு புகார் செய்வது?

தங்க நகை வாங்கும்போதோ, வாங்கிய பின்னரோ தரத்திலோ, எடையிலோ, வேறு எந்தக் குறைபாடோ வாடிக்கையாளருக்கு ஏற்பட்டால், இந்தியத் தர நிர்ணய ஆணையம், சி.ஐ.டி வளாகம், 4-வது குறுக்குத் தெரு, தரமணி, சென்னை-113 என்ற முகவரி அல்லது 044-22541988, 22541216, 9380082849 என்ற தொலைபேசி எண் மற்றும் meenu@bis.org.in என்ற இ-மெயில் முகவரியில் புகார் செய்யலாம். நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், அருகில் உள்ள நுகர்வோர் சேவை மையங்கள், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம்.


ஹால்மார்க் நகைகளை எப்படிக் கண்டுபிடிப்பது?

நகைகளில் BIS என்ற குறியீடு முக்கோண வடிவில் இருக்க வேண்டும்.

எவ்வளவு சுத்தமான தங்கம் என்ற அளவு இருக்க வேண்டும். உதாரணமாக.. 958 என்று இருந்தால் அது 23 காரட் தங்கம் என அர்த்தம். 916 - 22 காரட் தங்கம், 875 - 21 காரட் தங்கம், 750 - 18 காரட் தங்கம், 708 - 17 காரட் தங்கம், 585 - 14  காரட் தங்கம், 375 - 9 காரட் தங்கம்.

தங்கத்தின் மதிப்பீடும், ஹால் மார்க் சென்டரின் அடையாள குறியீடும் இருக்க வேண்டும். எந்த வருடத்தில் தயாரிக்கப்பட்டது என்பதும் குறிப் பிட்டிருக்க வேண்டும். உதாரணமாக.. 'A' என இருந்தால், அந்த தங்கம் 2000-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என அர்த்தம். 'B' - 2001, 'C' - 2002, 'D' - 2003, 'E' - 2004, 'F' - 2005, 'G'  - 2006, 'H' - 2007, 'J' - 2008. இது போல் தொடர்ந்து கணக்கிட்டுக்கொள்ளவும். 'Q' - 2015.

நகை வியாபாரிக்குரிய அடையாள குறியீடு இருக்க வேண்டும்.
  
தங்கத்தின் தன்மையை ஆராய பல்வேறு வழிமுறைகள் பின்பற்றுகின்றனர். அதில் ஒன்று எக்ஸ்ஆர்எஃப் (XRF: x-ray-fluorescence). இதன் மூலமாக ஆபரணத்தில் எவ்வளவு சதவிகிதம் தங்கம், காப்பர், சில்வர் உள்ளது என்பது போன்ற அனைத்து தகவல்களும் துல்லியமாகக் கிடைக்கும். இதற்கான கருவியின் விலை 10 முதல் 29 லட்ச ரூபாய். பெரிய கடைகளில் இந்த மெஷின் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது மக்களுக்குத் தெரிவதில்லை, சொல்லப்படுவதுமில்லை.

தற்போது உங்களிடம் உள்ள ஆபரணங்களின் தன்மையைத் தெரிந்துகொள்ள தமிழகம் முழுவதும் உள்ள 56 ஹால்மார்க் மையங்களுக்கு சென்று கண்டறியலாம். இதற்காக மிகக்குறைந்த கட்டணத்தில் அங்கே சோதனை செய்து தருவார்கள்.